Sunday, April 25, 2010

மரங்களை வளர்ப்போம்!

யாருமே தவமிராமல்
இயற்கை நமக்களித்த
வரங்கள்!
மரங்கள்!!

உலக உயிர்களையெல்லாம்
காத்துக்கொண்டிருக்கிற
கடவுள் நீட்டிய
கரங்கள்!
மரங்கள்!!

காற்று வரும் திசையை
நம் கண்களுக்கு உணர்த்தும்
கலங்கரை விளக்கம்!
மரங்கள்!!

உழைத்துக் களைத்த
உழவன்
உறங்கத் துடிக்கும்
தாய்மடி!
மரங்கள்!!

நம் சுவாசக்காற்றை
சுத்திகரித்து அனுப்பும்
சுத்திகரிப்பு ஆலைகள்!
மரங்கள்!!

தாயில்லா குழந்தைகட்கும்
சேயில்லா தாய்தந்தையர்க்கும்
குடிசைகள்கூட இல்லா
ஏழைகட்கும்
தாயாய்... சேயாய்...
குடிசைகளாய்...
மரங்கள்!!

அன்பாலும் கருணையாலும்
பிறரிதயந்தொட்ட
ஞானிகளைப் போல்
இதமான தென்றலால்
வான் மேகங்களை
வருடிக்கொடுத்து
மழைபொழிய வைக்கும்
மகாத்மாக்கள்!
மரங்கள்!!

செடியாய் கொடியாய்
இலையாய் பூவாய்
காயாய் கனியாய்
விதையாய் விறகாய்
சருகாய் மருந்தாய்
தன்னையே அர்ப்பணிக்கும்
தியாகச் செம்மல்கள்!
மரங்கள்!!

ஜாதிமத இனமொழி
வேறுபாடின்றி
பாரினில் உயர்ந்த
நம் பாரத தேசத்தினைப்போல்
ஓரறிவு முதல் ஆறறிவு வரை
உயிர்கள் அனைத்திற்கும்
அடைக்கலம் தரும்
ஆலயங்கள்!
மரங்கள்!!

மரங்களைப் பார்த்தாவது
மதங்கொண்ட மனிதர்களின்
மனங்கள் மாறட்டுமே!

மரங்களை வளர்ப்போம்!!


இக்கவிதை வெளிவந்துள்ள ஊடகங்கள்

1. தமிழ் ஆத்தர்ஸ்.கொம் (இணைய இதழ்) – 20-11-2011

2. பதிவுகள் (இணைய இதழ்) - 03-12-2011

3. காயல்பட்டினம் (இணைய இதழ்) - 31-01-2012

1 comment:

Anonymous said...

நல்வாழ்த்து சகோதரா.
வேதா. இலங்காதிலகம்.